Skip to main content

108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த ஆண் செவிலியர்; குவியும் பாராட்டுகள்!

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

108 A male nurse who gave birth in an ambulance

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அமரசேந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூத்தையா மனைவி சுதேசி. நிறைமாத கர்ப்பிணியான சுதேசிக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதால் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் 108 ஆம்புலன்ஸ் வேகமாக சென்று சுதேசிக்கு தேவையான முதலுதவி சிகிச்சை செய்து பின்பு அவரை அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும்போது திடீரென பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயச்சந்திரன் ஆம்புலன்ஸை சாலை ஓரமாக நிறுத்தினார். 

 

108 இல் அவசர மருத்துவ உதவிக்கான ஆண் செவிலியர் செல்வகுமார் உடனடியாக சுதேசிக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்திலேயே சுதேசிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சுதேசியையும் அவரது குழந்தையையும் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர். பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு தான் ஒரு ஆண் செவிலியர் என்றாலும் கூட உரிய நேரத்தில் பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர் செல்வக்குமார், ஓட்டுநர் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு சுதேசியின் உறவினர்களும் பொதுமக்களும், மருத்துவமனை ஊழியர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.