Skip to main content

மருத்துவ வசதி இல்லாத மலைக் கிராமம்; பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் குழு

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

108 Ambulance team attended delivery of pregnant women

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலைப்பகுதி குன்றி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி பசுவி (23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கடம்பூரில் இருந்து துரிதமாக 108 ஆம்புலன்ஸ் குன்றி பகுதியைச் சென்றடைந்தது.

 

அவரை பரிசோதிக்கச் சென்ற அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் விஜய், வீட்டின் உள்ளே நுழையும் போதே பிரசவ வலி அதிகரிக்கவே அங்கேயே தக்க மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயுக்கும் சேயிக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கொடுக்கப்பட்டு பின்னர் மருத்துவ மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் இருவரும் பத்திரமாக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் செ.விஜய் மற்றும் வாகன ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் மற்றும் குன்றி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

 

இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம், நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன், இவரது மனைவி தாரணி (23). தற்போது தாரணி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு தாரணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதை அறிந்த அவரது உறவினர் உடனடியாக மலையப்பாளையம் துணை சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 108 ஆம்புலன்ஸ் கரும்புக்காடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது தாரணிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சனஉல்லா வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். 

 

பின்னர் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் தாரணிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது தாரணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் கவுரிநாத் மற்றும் வாகன ஓட்டுநர் சனஉல்லா ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.