
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (24). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரான இவருக்கும், சிதம்பரத்தில் வேலை பார்த்துவந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கும் ஒன்றாகப் பேருந்தில் பயணம் செய்தபோது பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதன் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதற்கிடையே பெண்ணின் தரப்பினர் அருண்குமாரிடம் உடனடியாக திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அருண்குமார், தனது வீட்டில் சகோதரிக்குத் திருமணமாக வேண்டும் என்பதால் பொறுத்திருங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் சகோதரிக்குத் திருமணமான நிலையில், அருண்குமார் தொடர்ந்து இளம்பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிவந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில், அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை கடலூர் முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.
விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் இளம் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய மாணவர் அருண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத் தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அருண்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.