10 rupees doctor passes away in Chennai, people in grief

Advertisment

சென்னை தண்டையார்பேட்டையில் வசித்து வந்தவர் டாக்டர் கோபாலன். மன்னார்குடியைப் பூர்வீகமாக கொண்டவர். இவர் 1966ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் முடித்த பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றினார்.

2002ஆம் ஆண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்றார். பிரபல அறுவை சிகிச்சை நிபுணராகவும், மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி நன்மதிப்பை பெற்றவர். இவர் 1969ஆம் ஆண்டு முதல் சென்னை வண்ணாரப்பேட்டையில் கிளினிக் ஒன்றை வைத்து, 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்தார். 1976 ஆண்டு முதல் 2 ரூபாயில் இருந்து 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். பின்னர் மக்களாகவே சில்லறை தட்டுப்பாடு காரணமாக 10 ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்த்தனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவருடைய முதிய வயதிலும் பொதுமக்கள் மற்றும் சமூகத்திற்கு பல்வேறு வகையில் சேவையாற்றிய இவருக்கு பல அமைப்புகளின் சார்பிலும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவால் நள்ளிரவில் உயிரிழந்தார். இவருக்கு வயது 77 ஆகும்.

Advertisment

வடசென்னையில் ஏற்கனவே 5 ரூபாய் டாக்டர் ஜெயசந்திரன், வியாசர்பாடியில் 10 ரூபாய் டாக்டர் திருவேங்கடம் ஆகியோர் மறைந்த சோகமே மறையாத நிலையில், தற்போது டாக்டர் கோபாலனும் மறைந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.