சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து இறந்த தலைமை போக்குவரத்து காவலர் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரம் சாலையில் சாய்ந்துள்ளதால் அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். இந்நிலையில், இன்று (02.11.2021) காலை சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் கவிதா என்ற போக்குவரத்து தலைமைக் காவலர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார். இந்நிலையில், விபத்தில் பலியான கவிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.