போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா மீது தாய்லாந்து மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதால் இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

Advertisment

தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகள் 800 கி.மீக்கும் அதிகமான நிலப்பரப்பு கொண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. 1863ஆம் ஆண்டு முதல் 1953 வரை கம்போடியாவை ஆக்கிரமித்த பிரஞ்சு காலனித்துவத்தால் இந்த எல்லை பகிரப்பட்டது. அதில், 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தா முயென் தாம் என்ற இந்து கோவில் கம்போடிய எல்லைக்குள் வர அனுமதிக்கப்பட்டது. இந்த கோயில் தங்களுக்கு சொந்தம் என உரிமை கூறி தாய்லாந்து அந்த எல்லை பகிர்வை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் அவ்வப்போது எல்லை தொடர்பான பிரச்சனை நிலவி வருகிறது.

Advertisment

கடந்த 2008ஆம் ஆண்டில் இந்த கோயிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக கம்போடியா பதிவு செய்ய முயன்ற போது இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனையில் பெரிய மோதல் வெடித்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் நடந்த மோதலில் 15 கொல்லப்பட்டனர். இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்த எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து இரு நாடுகளும் தங்களது எல்லைகளை மூடுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து, தனது நாட்டில் உள்ள கம்போடிய தூதரை தாய்லாந்து அதிரடியாக வெளியேற்றியது. மேலும், ஏற்றுமதிகளைத் தடை செய்தல், கம்போடியாவிற்கான மின்சாரத்தை துண்டிக்கப் போவதாகவும் தாய்லாந்து அச்சுறுத்தியது.

இதனிடையே கடந்த ஜூலை மாதத்தின் போது, தாய்லாந்து ராணுவ வீரர்கள் கண்ணிவெடி வெடிப்பில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு கம்போடியா தான் காரணம் என தாய்லாந்து குற்றம் சாட்டியதை அடுத்து கடந்த ஜூலை மாதம் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த தாக்குதலில், 15க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர், பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்தது. இதையடுத்து, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் கொண்டுவந்தது. அப்போது, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Advertisment

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கம்போடியாவுடனான பிரச்சனைக்குரிய எல்லையில் தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது.