தூத்துக்குடி மாவட்ட கோவிப்பட்டி அருகே தளவாய்புரம் டாஸ்மாக் பாரில் கடந்த 25 ஆம் தேதி மந்திரம் மற்றும் முருகன் ஆகிய இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காவல்துறை வட்டாரத்தையும் சமூகத்தையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் எப்படி வெளியானது என்பது குறித்து தென் மண்டல ஐஜி பிரேமா ஆனந்த் சின்கா விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில், கொலைச் சம்பவம் நடைபெற்ற தகவல் கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிய வந்ததும், அங்கு டூட்டியில் இருந்த முதல் நிலைக் காவலர் பால் தினகரன் என்பவர் தளவாய்புரம் டாஸ்மாக் பாருக்கு முதலில் விரைந்து சென்றுள்ளார். அவர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட்டு, அதை கைப்பற்றியதாகத் தெரிகிறது.

Advertisment

அதன் பிறகு இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எஸ்.ஐ. சிலுவை அந்தோணி உள்ளிட்ட போலீசார் சென்றுள்ளனர். இரவு 9 மணிக்குப் பிறகுதான் சிசிடிவி ஹார்ட் டிஸ்கை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்யூட்டரில் காப்பி செய்த போதும், அதை போலீஸ்காரர் பால் தினகரன் தனது மொபைல் போனில் காப்பி செய்துள்ளார்.

4

இந்தச் சூழலில், சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற முதல் நிலைக் காவலர் பால் தினகரனிடமிருந்துதான் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகித்தனர். இதைத் தொடர்ந்து, அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், கொலைச் சம்பவ சிசிடிவி காட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையக் காவலர் அஜ்மீர் காஜா முகைதீன் என்பவரும், தென்காசி போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த காவலர் அருண்குமார் என்பவரும் தங்களது மொபைல் போனில் ஸ்டேட்டஸாக வைத்திருந்துள்ளனர். இதுகுறித்த தகவலும் மாவட்ட எஸ்.பி. கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, காவலர்கள் அஜ்மீர் காஜா முகைதீன் மற்றும் அருண்குமார் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட எஸ்.பி.க்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்  - எஸ்.மூர்த்தி