'Tell me wherever you want; they threatened to hit me with a lorry if I stopped digging' - Female VAO's sensational interview Photograph: (VAO)
அனுமதியின்றி மண் அள்ளியவர்களை தட்டிக்கேட்டுத் தடுத்து நிறுத்திய பெண் விஏஓ வீடு புகுந்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பாலமேட்டில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய சீனிவாசன் என்பவரை பெண் விஏஓ சிவகாமி தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த நிலையில் வீடு தேடி வந்த சீனிவாசன் விஏஓ சிவகாமி மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் காயமடைந்த பெண் விஏஓ நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த கிராம நிர்வாக அலுவலர் நலச் சங்கத்தினர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் விஏஓ சிவகாமி மீது தாக்குதலில் ஈடுபட்ட சீனிவாசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சையில் உள்ள பெண் விஏஓ சிவகாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''என்னுடைய பெயர் சிவகாமி. நான் திருச்செங்கோடு வட்டம் நாமக்கல் மாவட்டம் பாலமேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வருகிறேன். நேற்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு போனேன். அலுவலகத்தில் இருக்கும் பொழுது கிராமத்தில் மண் அள்ளுவதாக எனக்கு தகவல் வந்தது. நான் பீல்டுக்கு போய் மண் அள்ளுபவர்களிடம் கேட்கும் பொழுது அவர்கள் ஒரு சீட்டை காண்பித்தார்கள். அந்த சீட்டு என்னுடைய வட்டம் கிடையாது. என்னுடைய கிராமம் கிடையாது. வேறு கிராமத்தில் இருக்கும் சீட்டை காண்பித்தார்கள். அவர்களுடைய பெயர் முத்துக்குமார், கிருபா. அவர்களிடம் முறையாக அனுமதிபெற்று மண் அள்ளுங்கள் என்று சொன்னேன். 'நாங்கள் எல்லா பக்கமும் இப்படித்தான் செய்கிறோம். உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. நீ எங்க வேணாலும் சொல்லு நான் பாத்துக்குறேன். உன்னை லாரி ஏற்றிக் கொன்று விடுவேன்' என என்னை மிரட்டினார்கள். நான் உடனே ஆர்.ஐக்கு போன் பண்ணி சொன்னேன். 'நீங்கள் மண் அள்ளுவதும் இப்படிப் பேசுவதும் தவறு. மண்ணை அங்கேயே கொட்டி விட்டு வண்டி எடுத்துக் கொண்டு போங்க'' எனச் சொன்னார்.
அவர்கள் மண்ணை கொட்டிவிட்டுப் போய்விட்டார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே இருந்த கிருபா என்பவர் முஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் சொல்லியுள்ளனர். அவர் என்னுடைய கணவருக்கு போன் செய்து உன்னுடைய மனைவி செய்வது சரியில்ல. எப்படி என்னை மண் அள்ளக் கூடாது என தடுக்க முடியும் நான்தான் மண் அள்ளுவேன். அப்படித்தான் வள்ளுவன் அதை மீறித் தடுத்தால் அவளைக் கொன்று விடுவேன்' என்று அவதூறாக பேசினார்.
என்னுடைய வீட்டில் நான் என்னுடைய மாமியார் என்னுடைய ஒரு வயசு குழந்தை நாங்க மட்டும் தான் இருந்தோம். அதைத் தெரிந்து கொண்டு வீட்டுக்கு வந்த சீனிவாசன் 'எப்படி என்னை மண் அள்ளக்கூடாது என்று சொல்லலாம்' என என் முடியை பிடித்து இழுத்து கீழே தாக்குதலில் ஈடுபட்டார். இதில் கையில் காயம் ஏற்பட்டு நான் அங்கே மயக்கம் அடைந்தேன். இந்த தாக்குதல் குறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.