'Tax sharing among states is a huge injustice!' - Kanimozhi Karunanidhi MP. Vlasal Photograph: (dmk)
2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பேசினார்.
அப்போது, "இந்த பட்ஜெட்டை பற்றி பேச வேண்டும் என்றால், ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம். அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை; தமிழகத்திற்கான எந்தத் திட்டங்களும் இல்லை. தமிழகத்துக்கான திட்டங்களில் எதுவுமே தெளிவாக இல்லாமல், யாருக்கும் பயன்படும் வகையிலும் இல்லை. இது அடிப்படை இல்லாத ஒரு “AI பட்ஜெட்டாக”வே உள்ளது. விவசாயம் குறித்து அதிகமாக பேசாத பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த பட்ஜெட் மாநிலங்களுக்கு எதிரானதாக உள்ளது. ஏனெனில், நிதிக் குழுவின் (Finance Commission) பரிந்துரைப்படி, ஒன்றிய அரசின் வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற அறிவுரை உள்ளது. அதையே மாநிலங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாடும், நமது முதலமைச்சர் அவர்களும் இந்தக் கோரிக்கையை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த பரிந்துரையை கணக்கில் கூட எடுத்துக் கொள்ளாமல், இன்றைய பட்ஜெட்டில் 41 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருப்பது, மாநிலங்களுக்கு எதிரானதாகவும், மாநிலங்களுக்கு மிகப்பெரிய அநீதியை செய்திருக்கக் கூடிய ஒன்று. முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி குறித்து இந்த பட்ஜெட் ஏதேனும் பேசுமா, கல்விக்கான நிதி குறித்து இதில் தெளிவு கிடைக்குமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் எதற்காகவும் எந்தத் தெளிவும் இல்லாத பட்ஜெட்டாகவே இருக்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிறைய நிதி வரவேண்டிய நிலையில் உள்ளது. அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் தற்போது அதையும் குறைத்துள்ளனர். இவ்வாறு மாநிலங்களுக்கு எதிரான பல்வேறு அம்சங்களை கொண்ட ஒரு பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு எந்த நிதியையும் தராமல், நம்முடைய கனிம வளங்களை சுரண்டுவதற்காக திட்டமிடப்பட்ட பட்ஜெட்டாகவே இதை பார்க்க முடிகிறது. நம்முடைய அடிப்படை வளங்களை சுரண்டக்கூடிய ஒரு பட்ஜெட்டாக இந்த பட்ஜெட்டை நாம் பார்க்க முடியும்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் என்ற கேள்விக்கு; இந்த பாஜக அரசு மக்களை நிச்சயமாக ஏமாற்றியுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக இருக்கிறது. தேர்தல் காலத்தில் இது எதிர்க்கட்சிகள் எடுத்துப் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் அதையும் தாண்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, தமிழகத்தின் வளர்ச்சியையே எப்போதும் முன்னிலைப்படுத்தி வருகிறோம். அதனால், தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய அநீதியாகவும், பெரும் ஏமாற்றமாகவும் இந்த பட்ஜெட் இருக்கிறது. பாஜகவிற்கு தமிழக மக்கள் வாக்களிப்பது என்பது, சந்தேகத்திற்கு இடமில்லாமல், நிச்சயமாக என்றுமே நடக்காத ஒன்று என்று பதிலளித்தார்.
டபுள் இன்ஜின் சர்க்கார் குறித்த கேள்விக்கு, எங்க வருது டபுள் இன்ஜின் சர்க்கார். அது எந்த காலத்துக்கு வருதோ, அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். ஒருவேளை, எதை செய்தாலும் தமிழ்நாட்டில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம்; அதனால் தமிழகத்தை கவனிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவோடு இந்த பட்ஜெட்டை அவர்கள் தயாரித்திருக்கலாம். இந்த பட்ஜெட்டில் கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு - இந்த மூன்று மாநிலங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது என்ற கேள்விக்கு; நம்பிக்கையும் கனவும் என்பது எல்லோருக்குமான உரிமை. அவர்கள் அந்தக் கனவில் இருக்கட்டும்; தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் போது அந்தக் கனவுகள் களையும்’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்கள் குறித்து கேள்விக்கு; இது நிச்சயமாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை தாரை வார்த்துக் கொடுப்பதற்கான ஒரு திட்டமே தவிர, இதைத் தாண்டி வேறு ஒன்றுமில்லை. இதனை நாங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.நிதி அமைச்சர் எப்போதும் திருக்குறளை சொல்லிவிட்டு பட்ஜெட் தாக்கல் செய்வார். தற்போது, திருக்குறளும் சொல்லப்படவில்லை என்ற கேள்விக்கு; இந்த ஆண்டு பட்ஜெட்டில் திருக்குறளும் இல்லை; தமிழகத்திற்கான திட்டங்களும் இல்லை. அதுபோலவே, தமிழ்நாடும் அவர்களை மறந்துவிடும்" என்று பேசினார்.
Follow Us