தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கை நீதிமன்றம் விடுவித்தும் தமிழக மீனவர்கள் 33 பேர் தாயகம் திரும்ப இயலாமல் உணவு உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதனை தொடர்ந்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை நிபந்தனைகளுடன் சில தினங்களுக்கு இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன் பின்னர், 33 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் தற்போது வரை நீர்கொழும்பில் உள்ள இலங்கை தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனால், அவர்கள் யாரும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லாமல் பலரும் நோய்வாய்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனையோடு குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/05/fisher-2025-12-05-19-09-50.jpg)