தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, கூட்டணி குறித்து எந்தவித அறிவிப்பும் தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த் அறிவிக்காமல் இருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டனர்.
கட்சி தொடங்கி இதுவரை திமுக கூட்டணியில் சேராத தேமுதிக, முதல் முறையாக அக்கூட்டணியில் சேர்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த தேர்தல்களில் அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, தற்போது அந்த கட்சிகளுடன் சேராமல் திமுகவில் கூட்டணி வைத்திருப்பது அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரேமலதா விஜயகாந்த் இடம்பெறுவார் என்று கடைசி வரை நம்பிக்கை வைத்திருந்த கூட்டணித் தலைவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பா.ஜ.க தனது அதிருப்தியை தெரிவித்தது.
இந்த நிலையில், பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளாஅர். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை செளந்தரராஜனிடம், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மூழ்கிற கப்பலில் அவர்கள் சென்றிருக்கிறார்கள். கேப்டன் விஜயகாந்தின் தொண்டர்களை மூழ்கிற கப்பலில் அவர்கள் உட்கார வைத்திருக்கிறார்கள் என்பது மன வேதனையாக இருக்கிறது. ஏனென்றால் விஜயகாந்த் அரசியலில் ஒரு நேர்மை, ஒரு நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு, தன் ரசிகர்களுக்கு பாதுகாப்பு, மக்களுக்கு பாதுகாப்பு என இதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இப்போது அவருடைய இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே வருத்தத்தற்குரியது.
இது தொண்டர்களின் விருப்பம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தொண்டர்கள் இதை விரும்பினார்களா என்று எனக்குத் தெரியாது. மூழ்கிற கப்பலில் கேப்டனாக போனால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இன்றைய சூழ்நிலை. கேப்டன், கேப்டன் என்று தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டிருந்த ஒரு கேப்டனின் கட்சி, மூழ்கிற கப்பலில் சென்றுக் கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மிக மிக வலிமையாக இருக்கிறது. நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். பிரேமலதாவுக்கு எனது அனுதாபங்கள் அவ்வளவுதான்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/19/dmdktamili-2026-02-19-18-05-41.jpg)