“ஓ.பி.எஸ். இன்னும் கொஞ்சம் நிதானமாகத் தனது அரசியல் நகர்வை நகர்த்தி இருக்கலாம்” - தமிழிசை கருத்து!

tamilisai-soundararajan

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது என முடிவெடுக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, மதுரையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம்  (01.08.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.  அப்போது அவர், “என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். ஓபிஎஸ் விரும்பினால் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் நேற்று (02.08.2025) வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நயினார் நாகேந்திரன், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை. நயினார் நாகேந்திரனை, ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் அவர், எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “இதில் நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. தலைவர்கள் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த விசயம் வெளிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டியது தானே. இது 2 தலைவர்களுக்கும் இடையே உள்ளக் கருத்து மோதல். ஓபிஎஸ்.க்கு ஏதாவது கருத்து இருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லலாம். ஆனால் ஒரு தலைவரைக்  குற்றம் சொல்வது என்பது பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஓ.பி.எஸ். இன்னும் கொஞ்சம் நிதானமாகத் தனது அரசியல் நகர்வை நகர்த்தி இருக்கலாம் என்பது தான் எனது கருத்து” எனத் தெரிவித்தார். 

b.j.p nainar nagendran O Panneerselvam Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe