சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது ‘தமிழ்நாடு போராடும்’ என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள். தமிழ்நாடு யாருடன் போராடும்?. தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. எனவே தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்” எனப் பேசியிருந்தார். அதே சமயம் திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்
அதே சமயம் ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்டி தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்திமொழி ஊக்குவிப்பது அல்ல. நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரஸோடு நீங்கள் போராட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாராபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள். நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும். நீட் எதிர்த்து போராடுவேன் கையெழுத்து விடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
தொகுதி மறுவரையறை (Delimitation) என்று இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல். உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறை வணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள். ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா?. முதலமைச்சரே! மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள். வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக?. நீங்களே போராடுங்கள். கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்.
இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள். பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள். திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாலும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள். ஒரு வானூர்தி சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறையை எதிராக போராடுங்கள். ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கை எதிராக போராடுங்கள். இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது. அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.