​தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு தொலைநோக்குப் பார்வையாக அமைந்துள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் ஆ.மணிகண்டன் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கூடுதல் நிதி ஒதுக்கீட்டை ஆசிரியர் சமூகம் சார்பில் மனதார வரவேற்கிறோம். பள்ளிக் கல்விக்கு வரலாறு காணாத நிதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காக ரூ. 48,534 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இது கடந்த ஆண்டை விடக் கூடுதல் என்பதுடன், தமிழக அரசின் மொத்தச் செலவினத்தில் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ​பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள் மற்றும் புதிய வகுப்பறைகள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றும் முயற்சியாகும்.
மாணவர்களின் பசி போக்கி, வருகைப் பதிவை உயர்த்திய ​காலை உணவுத் திட்டத்திற்கான தொடர் ஆதரவு வரவேற்கத்தக்கது. உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் ​தமிழ்ப் புதல்வன் & புதுமைப் பெண் ஆகிய திட்டங்கள் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்குகின்றன. மதுரை மற்றும் சென்னைக்கு அடுத்தபடியாக, மற்ற முக்கிய நகரங்களிலும் நவீன நூலகங்கள் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பழக்கத்தை ஊக்குவிக்கும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்காக ரூ. 1.55 லட்சம் கோடி நிதி ஒதுக்கியிருப்பது, அரசுப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் அரசின் கடப்பாட்டைக் காட்டுகிறது. கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திறவுகோல் என்பதை உணர்ந்து, இந்த இடைக்கால பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு மிக உயரிய நிதியை ஒதுக்கிய முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
​உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர் நலத் திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த பட்ஜெட், தமிழகத்தை ஒரு ‘அறிவுசார் மாநிலமாக’ மாற்றும் என்பதில் ஐயமில்லை. ​இந்த ஆக்கபூர்வமான மற்றும் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை தமிழகத்தின் ஆசிரியர் பெருமக்கள் சார்பில் வரவேற்பதோடு, மானியக் கோரிக்கையின் போது இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையைப் பெற்று உரிய தீர்வினை வழங்கிடவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே இன சுழற்சி அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு அரசு நடத்தும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில், அனைவருக்கும் 40 % மதிப்பெண்ணை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடவும், 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக அறிவித்திடவும், வட்டார கல்வி அலுவலர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும், பள்ளிகல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படுவது போல, அதே முறையை பின்பற்றி எவ்வித முறையான பதவி உயர்வும் பெறாமல், நடுநிலைப் பள்ளிகளில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/17/tam-2026-02-17-22-57-01.jpg)