Tamil Nadu government officials explained with evidence at the Karur TVK stampede incident
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அதேபோல் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் 14 நாள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்து த.வெ.க தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், கரூரில் நடந்தது என்ன என்பது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் செந்தில்குளார் மற்றும் ஊடகத்துறை செயலர் அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அதில் அமுதா ஐ.ஏ.எஸ் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சில தவறான கருத்துக்களும், சந்தேகங்களும் வெளியிடப்பட்டு வருகின்றது. 7 இடங்களை தேர்வு செய்து தவெகவினர் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனர். காவல்துறையும், அவர்களும் கலந்தாலோசித்து 25ஆம் தேதி ஒரு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. 25ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் வேலுச்சாமிபுரத்தில் எந்த சிரமமும் இல்லாமல் பரப்புரை நடத்தியிருக்கிறார். அதனால், 26ஆம் தேதியே எங்களுக்கும் இந்த இடம் வேண்டும் என்று தவெகவினர் லெட்டர் கொடுத்தார்கள். முதலில், அவர்கள் லைட் ஹவுஸ் ரவுண்டானா கேட்டிருந்தார்கள். அங்கு பக்கத்தில் பாரத் பெட்ரோல் பங்க் இருந்தது. மேலும், ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அந்த இடத்தை போலீஸ் தரவில்லை.
அடுத்ததாக உழவர் சந்தையை தேர்வு செய்து கொடுத்திருந்தார்கள். அது சுமார் 30 இருந்து 40 அடி வரையிலான இடம். அதற்கு கீழே நேஷனல் ஹைவே இருக்கிறது. அது 60 அடி இருக்கும். இரண்டு இடத்திலும் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அந்த இடத்தை காவல்துறை தேர்வு செய்திருக்கிறது. அவர்கள் கொடுத்த மனுவில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று தான் கூறியிருந்தனர். ஆனாலும், அந்த கட்சியின் தலைவருடைய நாகப்பட்டினம், திருச்சியில் நடந்த கூட்டத்தில் அவர்கள் சொன்னதை விட அதிகமாகவே கூடினார்கள். அதனால், கூட்டம் 20,000க்கும் மேல் வருவார்கள் என்று கணித்து 500 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாதாரணமாக 50 பேருக்கு ஒரு போலீஸ் என்று நியமிக்கப்படும், ஆனால், இங்கு 20 பேருக்கு ஒரு போலீஸ் என கணக்கிட்டு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதன்படி, அங்கு 3 மணிக்கே 20,000 பேர் இருக்கிறார்கள். மேலும், கட்சித் தலைவர் பரப்புரை நடக்கும் இடத்திற்கு வரும்போது அவர் வண்டிகூட இன்னும் நிறைய பேர் வந்தார்கள். அதனால், மொத்தம் 20,000க்கும் மேலே இருந்தனர். விஜய் பேசும்போது மின்சாரம் நிறுத்தப்படவில்லை என மின்சாரத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் தடியடி நடத்தினார்களா என்ற கேள்வியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தவெக தலைவர் 6 மணி போல தான் கிளம்பி பரப்புரை இடத்திற்கு வருகிறார். ஏற்கெனவே அங்கு கூட்டம் இருக்கிறது, அவருடன் நிறைய பேர் வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யாரும் அங்கிருந்து நகர முடியாமல் போகிறது. வண்டி அங்கிருந்து நகர் கூட்டத்தை போலீஸ் விளக்கி விடுகிறார்கள். 12 மணிக்கு அவர் வர வேண்டும். கூட்டம் மதியத்தில் இருந்தே கூட ஆரம்பித்துவிடுகிறார்கள். 3 மணியில் இருந்து கூட்டம் கொஞ்ச கொஞ்சமாக அதிகமாக வந்தது. காலையில் இருந்து அவர்கள் காத்துக் கொண்டிருந்ததால் தண்ணீர் இல்லாமல் நிறைய பேர் சோர்வடைந்து கீழே உட்கார ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த நேரத்தில் கட்சித் தலைவருடைய வண்டி வர வர கூட்டம் ஓரத்தில் வந்துவிடுகிறார்கள். வண்டி வர வர சாலையில் உள்ள மக்கள் நகரும்போதும், அவருடைய முகத்தை பார்க்க முன்னாடி வரும் போது எல்லாம் சேர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது” என்று வீடியோ வெளியிட்டு விளக்கமளித்தார்.