பரபரப்பை ஏற்படுத்திய எஸ்.ஐ கொலை சம்பவத்தில் உயிரிழந்த எஸ்.ஐ சண்முகவேல் உடலுக்கு தமிழக டிஜிபி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில், மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தி, அவரது மூத்த மகன் தங்கபாண்டியன் மற்றும் இளைய மகன் மணிகண்டன் ஆகியோர் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் மூவரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில், தங்கபாண்டியனும் மணிகண்டனும் சேர்ந்து தந்தை மூர்த்தியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அருகிலிருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100-க்கு தெரிவித்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது. உடனே அங்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், தந்தை-மகன் சண்டையைப் பிரித்து சமாதனம் செய்திருக்கிறார். போலீஸ் வந்ததைப் பார்த்த மணிகண்டன், தோட்டத்தில் சென்று பதுங்கிக்கொண்டார். காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். மேலும், மூர்த்தி மற்றும் தங்கபாண்டியின் புகைப்படங்களை எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார். பின்னர் இருவரிடமும் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தபோது, மறைந்திருந்த மணிகண்டன் திடீரென சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க முயன்று அங்கிருந்து ஓடியுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/06/a4679-2025-08-06-17-25-21.jpg)
அப்போது, மதுபோதையில் இருந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் சேர்ந்து அவரை வெட்டிக் கொலை செய்தனர். மேலும், சிறப்பு உதவி ஆய்வாளருடன் இருந்த ஆயுதப்படைக் காவலர் அழகுராஜாவையும் மூவரும் துரத்திச் சென்றுள்ளனர். ஆனால், அவர் அவர்களிடமிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மண்டல டி.ஐ.ஜி. சசிமோகன் மற்றும் திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் குமார் யாதவ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். படுகொலை செய்யப்பட்ட சண்முகவேலின் உடல், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. உடுமலை டி.எஸ்.பி. நமச்சிவாயம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து. உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொலையான சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அதிர்ந்துகூட பேசாத நேர்மையான காவலர் என அந்த ஊர் மக்கள் அவரது உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்த கொலை தொடர்பாக மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டிய ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர். கொலை செய்த மூன்று பேரில் இருவர் சரணடைந்த நிலையில் மூன்றாவது நபரான மணிகண்டன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் உடுமலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள எஸ்.ஐ சண்முகவேல் உடலுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்த வந்தசங்கர் ஜிவாலிடம் சண்முகவேலின் குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தொடர்ந்து டிஜிபி தலைமையில் அரசு மரியாதையுடன் உடலை தகனம் செய்யும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.