நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில், தமிழக மற்றும் புதுவை எம்.பிக்கள் 40 பேரும் டெல்லியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுத்துறை எம்.பியான சுதாவின் தங்கச் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியில் உள்ள நாடாளுமன்ற குடியிருப்பு அருகே இன்று (04-08-25) காலை காங்கிரஸ் எம்.பி சுதா நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், எம்.பி சுதா கழுத்தில் இருந்த 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்.பி சுதா, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் செயினை ஒருவரை பறித்துச் சென்ற சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.