நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை வாசிக்காமலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் வாசிக்கவிருந்த தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருக்கு பதிலாக சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இந்த நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (24-01-26) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.
அப்போது அவர், “ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாத்திற்கு பதிலளிக்க வேண்டிய நான், இன்று ஆளுநருக்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் நின்றுக் கொண்டிருக்கிறேன். இது பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எதிர்கொள்ளாதது. அவர்கள் காலத்தில் இருந்த ஆளுனர்கள் கூட இப்படி இல்லை. முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும் அதை ரணமாக்கும் வகையில் செயல்பட்டது இல்லை. அந்த வகையில் அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் நின்று கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரைக்கும் சோதனைகள் எனக்கு புதிதல்ல, சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். என்னை சீண்டி பார்ப்பவர்கள் மனதுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர என்னை எதுவும் செய்ய முடியாது.
14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மீண்டும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி இருக்கிறது. இதை சொல்வது நாங்கள் அல்ல, ஒன்றிய அரசின் புள்ளியல் துறை. ஆளுநர் கேள்வி கேட்க வேண்டுமென்றால் அவரை இங்கு அனுப்பிவிட்ட ஒன்றிய அரசை தான் கேட்க வேண்டும். தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறியுள்ளது. சட்ட ஒழுங்கை பொறுத்தவரையில் கடந்த அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் கொலைகள், ஆதாய கொலைகள், வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்கொடுமை என எல்லாமே பெருமளவு குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. உணவு பதப்படுத்தும் ஒரு சிறுகுறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காக தமிழ்நாட்டுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. மாநில கூற்று வங்கியின் சிறந்த சேவைக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவே விருது வழங்கி இருக்கிறார். ஒன்றிய அரசிடம் இருந்து மட்டும் தமிழ்நாடு 65க்கு மேற்பட்ட விருதுகளை வழங்கியிருக்கிறது. இவ்வளவுக்கும் பிறகும் ஆளுநர் விமர்சிக்கிறார் என்றால் அவருடைய பார்வைதான் பழுதுபட்ட பார்வையாக இருக்கிறது. நம் அரசு செய்திருக்கும் திட்டங்களை பார்த்து கேட்டு மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். ஏன் நம்முடைய திட்டங்களை ஒன்றிய அரசு எடுத்து நாடு முழுக்க செயல்படுத்தி வருகிறார்கள். நம்மை விமர்சிக்கிற ஆளுநருக்கு இதெல்லாம் தெரியாமல் இருப்பது தான் வியப்பாக இருக்கிறது. இங்கு மதச்சண்டை இல்லை, சாதி சண்டை இல்லை, கும்பல் வன்முறை இல்லை, தொடர் வன்முறை இல்லை. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை.
கடந்த தேர்தலின் போது யாரும் கொடுக்காத வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோம். முடிந்த அளவுக்கு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். உங்களால் நிறைவேற்ற முடியாது என்று சவால் விடப்பட்ட வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றி காட்டி இருக்கிறோம். இவர்கள் செய்யவே மாட்டாங்க என்று சொல்லப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் செய்து இருக்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்து துறையும், எப்போது வளரும் என்று ஏக்கத்தில் இருந்த வாட்டத்தை போக்க அனைத்து துறையிலும் சமச்சீரான வளர்ச்சியை டைந்திருக்கிறோம். பெரிய நகரங்களுக்கு மட்டும் தான் தொழிற்சாலைகளா? பாலங்களா? சாலைகளா? நூலகங்களா? கல்லூரிகளா? உட்கட்ட வசதிகளா? சலிப்போடு கேட்டதை மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்தையும் கொண்டு சேர்ந்திருக்கிறோம். இவை அனைத்திலும் சமூக நீதியை சமநிதியை நிலைநாட்டி இருக்கிறோம். இவை அனைத்தும் என்னால் தான் ஆனது என்று கர்வம் கொள்ளக்கூடியவன் அல்ல நான், மூத்த அமைச்சர்கள் நம்முடைய துணை அமைச்சர், உள்ளிட்ட அமைச்சரின் பங்களிப்பு இல்லாமல் இதை நான் செயல்படுத்தி இருக்க முடியாது. ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கிய இங்கே இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இதெல்லாம் சாதனையாக படைத்திருக்க முடியாது.
உயிரும் உணருமாக இருந்து என்னை இயக்கிக் கொண்டிருப்பது திமுகவின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள் தான். எனக்கு மனவலிமையை கொடுப்பதும், அனைத்து வகையிலும் தோல் கொடுப்பதும் எங்களுடைய தோழமை கட்சிகள் தான். ஜனநாயகத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி என்றால், இன்னொரு பக்கம் எதிர்கட்சிகள். மக்கள் மன்றத்தில் தேவையற்ற பல விமர்சனங்கள் செய்தாலும், இந்த சட்டமன்றத்தில் சில ஆலோசனைகள் வைத்திருக்கூடிய அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எனக்கும், என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தினந்தோறும் திட்டங்களை தீட்டி உழைத்திருக்கிறேன். இன்னும் உழைக்க காத்திருக்கிறேன். இந்த ஐந்து ஆண்டு கால உழைப்பையும், வளர்ச்சியையும் பார்த்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனக்கு என்னை விட தமிழ்நாட்டு மக்கள் மீது கூடுதலான நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக நாங்கள் தான் மீண்டும் வருவோம்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/mkass-2026-01-24-12-11-53.jpg)