Tamil Nadu Chief Minister inaugurated the Kollidam joint drinking water project
சிதம்பரத்தில் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக ரூ 255.64 மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார்.
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களை சேர்ந்த 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 கிராமங்களுக்கு கொள்ளிடம் ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூ 255.64 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனை சிதம்பரம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் உமா, மேற்பார்வை பொறியாளர் நித்தியானந்தம், நகராட்சி ஆணையர் மல்லிகா, மூத்த நகர்மன்ற உறுப்பினர்கள் அப்பு.சந்திரசேகரன், மணிகண்டன், தாரணி, கல்பனா, சுதா, லதா. திமுக நகர துணைச் செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
அதேபோல் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியின் புகழினை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுலாத்தலமாக மாற்ற ஏரியில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ 8 .08 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் நிர்வாக அலுவலக கட்டிடம், சிறுவர் விளையாட்டு பூங்கா, வாகன நிறுத்தமிடம், கழிவறை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல அலுவலர் பிரபுதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Follow Us