திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று திமுக நடத்தும் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' எனும் தலைப்பில் திமுக மகளிர் மேற்கு மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. தேர்தல் விரைவில் வர உள்ளதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து இந்த மாநாடு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் ஆறு மாவட்டங்களை இணைத்து இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் மகளிர் இருசக்கர அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  "காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முஸ்தி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது செய்தியாளர் ஒருவர் நீங்கள் ஏன் காஷ்மீரி மொழியில் பேசுகிறீர்கள் உருது மொழியில் பேசுங்கள் என்று கூறியதற்கு, இதே கேள்வியை தமிழ்நாட்டிற்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் கேட்பதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என்று மெகபூபா கூறினார். அப்படியானால் மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என எந்த உரிமையாக இருந்தாலும், காஷ்மீரிலிருப்பவர்களுக்குக் கூட நம் முதலமைச்சரின் பெயர் தான் நினைவுக்கு வருகிறது. பேசினார்.

Advertisment

தொடர்ந்த பேசிய உதயநிதி  ஸ்டாலின், ''அறிஞர் அண்ணா தான் சுமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்கிற சட்டத்தைக் கொண்டுவந்தவர். கலைஞர் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிருக்கு காவல்துறையில் பணிவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர். அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மகளிர் ஆசிரியர்கள் மட்டும் தான் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவந்தார் கலைஞர் தான். இந்தியாவிலேயே 1989 ம் ஆண்டு முதன்முதலாக பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தைக் கொண்டுவந்ததும் கலைஞர் தான். அவர்கள் வழியில் வந்த நம் முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன், அவர் கையெழுத்திட்ட முதல் திட்டம் மகளிருக்கான விடியல் பயணம் தான். ''நாங்க பீகார்ல ஜெயிச்சிட்டோம் எங்க அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்" என்று அமித்ஷா கூறுகிறார். சுயமரியாதையுள்ள இந்த மகளிர் படை உள்ளவரை தமிழ்நாட்டை சாங்கிகளால் தொட்டுக் கூட பார்க்க முடியாது'' என்றார்.