நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைத்தள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் இந்த உத்தரவை மீறிய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. இதற்கு நாடெங்கிலும் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகக் கடந்த 08ஆம் தேதி (08.09.2025) முதல் அங்குப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதாவது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தும் போராட்டமானது அந்நாட்டுத் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் முற்றுகையிடப்பட்டன. அதே சமயம் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். அதோடு 300க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்தனர். மற்றொருபுறம் நேபாள அரசு இந்தப் போராட்டம் தொடர்பாக அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினரும் களம் இறக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் சுடுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்களானது வெளியாகியிருந்தன.
இருப்பினும் நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்தும், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார். இந்நிலையில் நேபாள நாட்டின் இடைக்கால பிரதமராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கே (வயது 73) பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். இதன் மூலம் நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பை சுசீலா கார்கி பெற்றுள்ளார். இவர் பாலின சமத்துவம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் ஆவார்.