“எங்களை ஏதாவது சொல்ல கட்டாயப்படுத்தாதீர்கள்” - அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

supremecourt

Supreme Court slams Enforcement Directorate Don’t force us to say anything

கர்நாடகா மாநிலத்தில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) சார்பில் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முடா மோசடி வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மைசூர் லோக்ஆயுக்தா போலீசார், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரணையும் நடத்தி வருகிறது. இதற்கிடையே மூடா வழக்கு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு, எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்தா போலீஸ் தெரிவித்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் சட்ட விதிகளை தவறாக புரிந்துகொள்வதால் ஏதேனும் முரண்பாடுகள் எழுந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களான முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரையும் இந்த வழக்கில் இருந்து லோக் ஆயுக்தா போலீஸ் விடுவித்தது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. முடா மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் கீழ் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 92 சொத்துக்களை முடக்கினர்.

இந்த நிலையில், முடா வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘எங்களை ஏதாவது கடினமாக சொல்லிவிட கட்டாயப்படுத்தாதீர்கள். அரசியல் போட்டிக்காக அமலாக்கத்துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது?. அரசியல் போட்டி மக்கள் மன்றத்தில் மட்டும் இருக்கட்டும். தயவுசெய்து எங்களை ஏதாவது சொல்ல கட்டாயப்படுத்தாதீர்கள். ஏனென்றால், அமலாக்கத்துறைக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவிக்க வேண்டியிருக்கும்’ என்று கூறி அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

karnataka muda Siddaramaiah Supreme Court
இதையும் படியுங்கள்
Subscribe