டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, முந்தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணியிட மாற்றம் செய்யபட்டார்.
இதற்கிடையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சமர்பித்த ரகசிய அறிக்கையை சஞ்சீவ் கண்ணா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடிக்கும் அனுப்பினார். விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது, பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரிய தீர்மானம் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மக்களவை எம்.பிக்கள் 145 பேரும், மாநிலங்களவை எம்.பிக்கள் 63 பேரும் கையெழுத்திட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, தனது இல்லத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட உள்ள குழுவின் கண்டுபிடிப்புகளை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது என்றும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு அமர்வு அமைக்கப்படும் என்று கூறி தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் இந்த வழக்கில் இருந்து விலகினார்.
இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு மீதான விசாரணை நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (07-08-25) வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவேற்றுவதைத் தவிர தலைமை நீதிபதியும் அதன் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர். மேலும் அது தேவையில்லை என்று நாங்கள் கூறியுள்ளோம். ஆனால் அப்போது நீங்கள் அதை எதிர்க்காததால் எதுவும் தடுக்கபடவில்லை. பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பியது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று நாங்கள் கருதினோம். உள்ளக விசாரணைக் குழு தொடர்பான முழு நடைமுறையும், அதிலிருந்து வெளிவந்த தொடர் அறிக்கையும், உண்மையில் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைக் கொண்டுள்ளன அதனால், அது அரசியலமைப்பிற்கு முரணான நடைமுறை அல்ல’ என்று கூறி யஷ்வந்த் வர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க நடவடிக்கைகளுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.