டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, முந்தைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், =சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணியிட மாற்றம் செய்யபட்டார். இதற்கிடையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு சமர்பித்த ரகசிய அறிக்கையை சஞ்சீவ் கண்ணா, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு, பிரதமர் மோடிக்கும் அனுப்பினார். விசாரணையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது, பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கோரிய தீர்மானம் தொடர்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மக்களவை எம்.பிக்கள் 145 பேரும், மாநிலங்களவை எம்.பிக்கள் 63 பேரும் கையெழுத்திட்ட நோட்டீஸ் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, தனது இல்லத்தில் இருந்து பணம் மீட்கப்பட்டதையடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட உள்ள குழுவின் கண்டுபிடிப்புகளை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது என்றும் இந்த வழக்கு தொடர்பாக ஒரு அமர்வு அமைக்கப்படும் என்று கூறி தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் இந்த வழக்கில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், தன் மீதுள்ள விசாரணை அறிக்கையையும், அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்னா தன்னை நீக்க பரிந்துரைத்ததையும் எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, ‘நீதிபதிக்கு எதிராக சில ஆதாரங்கள் உள்ளன. நீதிபதியைப் பொறுத்தவரை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு நடவடிக்கையை எடுக்க உயர்நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை. பதவிநீக்க கோரிக்கை வந்தால், அதை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பிவிட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெறும் தபால் நிலையம் அல்ல. நீதித்துறையின் தலைவராக அவருக்கு தேசத்திற்கு சில கடமைகள் உள்ளன. நீதித்துறையின் நம்பகத் தன்மையைக் காக்க, இன் ஹவுஸ் (IN-HOUSE) விசாரணைக்கு உத்தரவிட எங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகிறது” என்று கூறி இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Advertisment