Supreme Court ordered to Tamil Nadu government DGP appointment issue
தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் என்பவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பணியாற்றி வந்த நிலையில் அவர் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தின் போது பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்தது.
சட்ட ஒழுங்கிற்கென நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் பொறுப்பு டிஜிபியை தமிழக அரசு நியமித்திருப்பதால் தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகவும், நிரந்தர டிஜிபியை திமுக அரசு நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் டிஜிபி தேர்வுக்கான பரிந்துரை பெயர் பட்டியலை தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கவில்லை என்றும், இது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் என் திவேன் மற்றும் கிஷோர் கே.சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (12-02-26) வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வில்சன், யுபிஎஸ்சி தேர்வு குழுவில் தமிழக அதிகாரிகளான தலைமைச் செயலாளரும், டிஜிபியும் இடம்பெற வேண்டும். ஆனால் தற்போது அந்த டிஜிபியே நாங்கள் அடுத்த டிஜிபிக்காக பரிந்துரைக்கும் நபராக இருப்பதால் அதில் இடம் பெறுவதில் சிக்கலாக இருக்கிறது. எனவே மாற்று நபர் இடம்பெற அனுமதிக்க வேண்டும். குறிப்பாக அந்த டிஜிபிக்கு பதிலாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தேர்வு குழுவில் இடம்பெற வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அடுத்த டிஜிபியை தேர்வு செய்ய புதிய பெயர்களை தமிழக அரசு யுபிஎஸ்சிக்கு ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கக்கூடிய அந்த பெயர்களை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி தேர்வுக்குழு டிஜிபியை பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Follow Us