இணைய தளங்களில் அதிக அளவில் தங்களுக்கான வரன்களைத் தேடிக்கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பிரபல திருமண வரன் தேடும் இணையதள உரிமையாளர் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகார் அளித்துள்ளார். அதாவது, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சந்தியா திருமணத்திற்காக சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் பதிவு செய்து, வரன் தேடி வந்துள்ளார்.
அதே இணையதளத்தில் வரன் தேடி வந்த ஒருவர் சந்தியாவிடம் ரூ. 11 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பின்பு தான், அந்த நபரின் வரன் தேடும் கணக்கு போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பதிப்பிற்குள்ளான சந்தியா, போலிக் கணக்கினால் தான் ஏமாற்றப்பட்டதாகவும், இணையதளத்தில் உள்ள கணக்குகளை நிறுவனம் சரிபார்க்கத் தவறிவிட்டதாகவும் கூறி ஹைதராபாத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், இணையதள நிறுவனர் அனுபம் மிட்டல் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் மிட்டல் வழக்குத் தொடுத்தார். ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் நிவாரணம் பெற மிட்டல் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்ச நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் (03.02.2026) இந்த வழக்கு நீதிபதிகள் குமார் மிஸ்ரா மற்றும் அஞ்சாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், மீண்டும் இந்த வழக்கை விசாரணை செய்ய உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் இடைக்கால ஜாமின் பெறவும் உயர் நீதி மன்றத்தையே நாடவும் அறிவுறுத்தினர். அதே நேரத்தில், இரு வாரங்களுக்கு அனுபம் மிட்டலை கைது செய்யக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow Us