டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது என்று கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில்  இன்று (14.10.2025) விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், “டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை மட்டுமே நடத்தப்பட்டது. 

Advertisment

யாரையும் கைது செய்யவில்லை. இந்த விவகாரத்தில் பல ஆதாரங்கள் கிடைப்பதற்கு முன்பாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடுகையில், “அமலாக்கத்துறை நடத்தும் விசாரணை நடைமுறை சரியானது அல்ல. லஞ்சம் தொடர்பாக அல்லது ஊழல் தொடர்பாக எங்குப் புகார் அளித்தாலும் உடனடியாக அதில் தலையிடுவதுதான் அமலாக்கத்துறைக்கு வேலையா? எனவும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் குறித்த மற்றொரு மனு மீதான விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதால் அதனை விசாரித்து முடித்த பிறகு தமிழ்நாடு டாஸ்மாக் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கை விசாரிக்கப்படும். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்பு உள்ளதா?. டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். அதாவது உச்சநீதிமன்றத்தின் முந்தைய இடைக்கால உத்தரவு தொடரும்” என உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment