Supreme Court
கடந்த 2022 ஆண்டு டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, மேட்ரிமோனி இணையதளத்தின் மூலமாக ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. திருமணம் செய்வதாகக் கூறி அந்த பெண்ணுடன், நீண்ட காலமாகப் பழகி வந்துள்ளார். இதையடுத்து, டெல்லி மற்றும் துபாய் போன்ற இடங்களுக்கும் அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். திருமணம் செய்வதாக நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி அப்பெண்ணிடம் மிக நெருக்கமாக இருந்து வந்துள்ளார். பின்பு, இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மிரட்டி தன்னுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு, அவர் இந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், நடந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில், சம்பந்தப் பட்ட நபர் திருமணம் செய்வதாகக்கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (17-02-26) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘நடந்த சம்பவம் இரு தரப்பு சம்மதத்துடன் நடந்துள்ளது போல் தெரிகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வெவ்வேறானவர்கள். அப்படியிருக்க ஒருவரையொருவர் முழுமையாக நம்பக் கூடாது. நெருங்கிப் பழகுவதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருவரின் சம்மதத்துடன் நடந்த ஒரு சம்பவத்தை, பிரச்சனைக்குப் பின் குற்ற வழக்காக மாற்றுவது சரியான அணுகுமுறையாக இருக்காது. அதனால், இரு தரப்பினரும் சமரசத்திற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Follow Us