Supreme Court judge surya kanth says Marriage is being used tool for oppression against women
பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு ஒரு தவறான கருவியாக திருமணம் பயன்படுத்தப்படுகிறது என உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார்.
‘இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் குடும்பச் சட்டத்தில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் சவால்கள்: பன்முக கலாச்சாரக் கண்ணோட்டங்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்க நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது, “உலகம் பெருகிய முறையில் ஒன்றோடு ஒன்றாக இணைந்திருப்பதாலும், வாழ்க்கைத் துணைவர்கள் பெரும்பாலும் வெவ்வெறு நாடுகளில் வசிப்பதாலும் எல்லை தாண்டிய திருமண தகராறுகள் நடக்கிறது. இரு துணைவர்களுக்கும் திருமணம் கடினமானதாக இருக்கலாம். ஆனால் கண்டங்கள், கலாச்சாரங்கள் மற்றும் சகாப்தங்கள் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு ஒரு தவறான கருவியாக திருமணம் பயன்படுத்தப்படுகிறது என்று வரலாறு கூறுகிறது.
இது ஒரு சங்கடமான உண்மையாகவே இருந்தாலும், சமகால சட்ட மற்றும் சமூக சீர்திருத்தங்கள் அதை சமத்துவம் மற்றும் மரியாதைப்படுத்தி படிப்படியாக மறுவரையறை செய்கின்றது. இந்தியாவில் நீதித்துறையும், சட்டமன்றமும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டக் கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. திருமணத்தை மீறிய உறவு தொடர்பான வெளிநாட்டு திருமண தீர்ப்புகளை அங்கீகரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. இருப்பினும், அத்தகைய தீர்ப்புகள் மோசடி மூலம் பெறப்பட்டாலோ அல்லது இயற்கை நீதியின் கொள்கைகளையோ அல்லது இந்த நாட்டின் அடிப்படை சட்டங்களையோ மீறினால் இந்தியாவில் அவை அங்கீகரிக்கப்படாது என்றும் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் சம்பந்தப்பட்டால் இந்த தகராறுகள் மிகவும் சிக்கலானதாகிவிடும். இதுபோன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள், நீதிமன்றங்களின் ஒற்றுமையின் கொள்கையை மதிக்க வேண்டும், அதிகார வரம்புகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும், அதே நேரத்தில் குழந்தையின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று கூறினார்.