மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் கால நிர்ணயம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது உச்ச நீதிமன்றத்திற்குக் குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 10வது நாளாக இன்று (10.09.202) நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு நீதிபதிகள், “சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றியவுடன் அதன் விளைவுகளை என்பது கருதப்பட வேண்டும். அரசியலமைப்பின் 200வது மற்றும் 201வது ஆகிய 2 சட்டப் பிரிவுகளையும் இணைத்தே வாசிக்க வேண்டும். அரசியலமைப்பின் படி மசோதா மீண்டும் ஜனாதிபதியிடம் சென்றால் அவர் 2வது முறையாக அதை நிறுத்தி வைக்க முடியாது. 

Advertisment

மசோதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உள்ளது. சில மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க 4 ஆண்டுகள் வரை ஏன் தாமதம் ஏற்பட்டது?”என்ற கேள்வியை மத்திய அரசுக்கு எழுப்பினர். அதற்கு மத்திய அரசின் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதிலளிக்கும் வகையில் வாதிடுகையில், “கடந்த 1970 ஆம் ஆண்டு வரை முதல் 90% மசோதாக்களுக்குக் குறுகிய காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டன” எனத் தெரிவித்தார். இதற்குத் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தனர். 

அதாவது, “கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் 4 முதல் 5 ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆளுநர்கள் முரணாக நடந்து கொண்டுள்ளார்கள்” என்ற வாதத்தை முன்வைத்தனர். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த வழக்கு விசாரணையின் வாதங்கள் நாளை (11.09.2025) தொடரும்” எனத் தெரிவித்தனர். முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிஜிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “சில மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்படாததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

ஒரு சில மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்படாமல் இருந்ததற்காக ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையுமே மாற்ற வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தால் அவ்வப்போது தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்ற முடியாது. ஆளுநர் வெறும் கையொப்பம் இடுபவர் என்ற வாதம் ஒரு தலைப்பட்சமானது. மசோதாக்கள் மாநில நலனுக்குப் பாதகமாக இருக்கும் சூழலில் முதல்வர்கள் ஆளுநர்கள் மூலம் தாமதம் செய்யக்கூடிய சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.