டாஸ்மாக்கில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமலாக்கத்துறையின் இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது என்று கூறி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதே சமயம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு இன்று (14-10-25) வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ‘எந்தவொரு வழிமுறையும் பின்பற்றாமல் அமலாக்கத்துறையினர், அரசினுடைய முக்கிய அலுவலகங்களில் சோதனை நடத்தி கணிப்பொறியல் போன்ற முக்கிய தரவுகளை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது அச்சுறுத்தல் தரக் கூடிய செயல்’ எனக் குற்றம் சாட்டியது.

இதனை கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா?. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பாக அது சம்பந்தமான தகவலை சம்பந்தப்பட்ட அரசிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் அமலாக்கத்துறையினர், இது போன்ற எந்தவொரு தகவலை கூறவில்லை” எனக் கடிந்து கொண்டார்.

Advertisment

அப்போது அமலாக்கத்துறை, ‘டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. அதனால் தான் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தை கையில் எடுத்து சோதனை நடத்தியது.  மிகப்பெரும் முறைகேட்டை எப்படி விடுவது? சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை மட்டும் விசாரிக்கிறோம்’ என வாதிட்டது. அதற்கு தமிழக அரசு, ‘டாஸ்மாக் அரசு நிறுவனத்தில், அதிகாரி யாரேனும் தவறு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் அவரிடம் தான் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அமலாக்கத்துறை அத்துமீறி இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்.  சட்டம், ஒழுங்கு மாநில அதிகாரத்தில் இருக்கும்போது அமலாக்கத்துறை எப்படி நுழைய முடியும்?. வழக்குப்பதிவு செய்தாலே எந்தவொரு அரசு நிறுவனத்தை வேண்டுமானாலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தலாம் என்ற அதிகார வரம்பு மீறப்படுகிறது’ என வாதிட்டது.

இதையடுத்து, ‘36 வழக்குகள் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு விசாரித்து முடித்து வைத்திருக்கிறது. வழக்கை முடித்து வைத்ததில் இருந்தே முறையான விசாரணை நடக்கவில்லை என்பது தெளிவாகிறது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை என சந்தேகம் இருந்தால் உடனே தலையிட அதிகாரம் உள்ளது’ என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “மாநில அரசு உரிய முறையில் விசாரிக்கவில்லை என சந்தேகம் வந்தால், உடனே அமலாக்கத்துறை தலையிடுமா? அவர்கள்(தமிழ்நாடு அரசு) கூட்டாட்சி தத்துவம் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார்கள்? உங்களிடம் விடை உள்ளதா?’ எனக் கேள்வி எழுப்பினார்.