Supreme Court Chief Justice warns WhatsApp corporation
வாட்ஸ் அப் செயலியை நாடு முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்தியப் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளைத் தனியார் விளம்பர நிறுவனங்களுக்குப் பகிர்தல் சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில், வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு இந்தியப் போட்டி ஆணையம் ரூ. 213.14 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து, வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை இன்று (03-02-26) தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளால், நமது தனிப்பட்ட தரவுகள் விற்கப்படுவதோடு மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் சுரண்டப்படுகிறது’ என வாதங்களை முன் வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வாட்ஸ்அப் மற்றும் அதன் தாய் நிறுவனமான மெட்டாவின் செயல்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, நீதிபதிகள் இந்நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
அதில் நீதிபதிகள் கூறியதாவது, ‘தரவுப் பகிர்வு என்ற பெயரில் எங்கள் நாட்டுக் குடிமக்களின் தனியுரிமை சார்ந்த விஷயத்தில் நீங்கள் விளையாட முடியாது. மக்களின் தரவுகளில் ஒரு வார்த்தையைக் கூட நீங்கள் மற்றவர்களுக்குப் பகிர்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் எங்கள் நாட்டுத் தனியுரிமை விதிகளை மீற முடியாது. இந்நாட்டில் மக்களின் தனியுரிமை தீவிரமாகப் பாதுகாக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்ற முடியாவிட்டால், எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள். தொழில்நுட்ப நிறுவனங்களால் தனியுரிமை விதிமுறைகள் மக்களுக்குப் புரியாத வகையில் வடிவமைக்கப்பட்டு, இந்த ஒழுங்கற்ற ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி மக்களின் தரவுகளை நிறுவனங்கள் மற்றவர்களுக்குப் பகிர்வதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் வருகின்ற 9ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று காட்டமாக கூறி இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.
Follow Us