Supreme Court agonizes about Karur stampede incident
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் கடந்த ஆண்டு முதலே தொடங்கிவிட்டன. அந்த வகையில், தவெகவும் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வந்தது. மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என பரபரப்பாக தேர்தலில் பணிகளில் கட்சியினர் ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழ்நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் 27ம் நாள் கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, அக்கட்சியினரிடையே பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து நீண்ட நாட்கள் கட்சி சார்ந்த எந்த தேர்தல் பணிகளும் நடைபெறாமல் இருந்தன. பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்கட்சி சார்பாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, ஈரோட்டில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த சூழலில், தொடர்ந்து அக்கட்சி தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.
அதே வேளையில், கரூர் சம்பவம் குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிஐ இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில், தவெக வின் முக்கிய நிர்வாகிகளான நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுன், ஆனந்த் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதனையடுத்து, கட்சியின் தலைவரான விஜயிடம் கடந்த 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது, இந்த வழக்கு சம்பந்தமாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஒருவேளை, தேர்தலுக்கு முன்னதாகக் தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கரூர் சம்பவம் மக்களிடையே மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இனிவரும் காலங்களில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதன் நீட்சியாக, நாடு முழுவது அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக, உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று (22-01-26) வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கரூர் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தனர். கரூரில் நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் அந்த சம்பவம் குறித்து எந்த வித கருத்தும் கூற விருப்பம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Follow Us