சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அஜித்குமாரின் குடும்பத்தாரை சந்தித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆறுதல் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மடப்புரத்தில் ஒரு அப்பாவி இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும், விசாரணை கைதி கொலை இனி தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. நிக்கிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இவ்வளவு செய்திருக்கிறார்கள் முதலில் அந்தப் பெண்ணை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கில் பின்னால் பல மர்மங்கள் உள்ளதாகவும் அந்த மர்மங்கள் வெளிப்பட வேண்டும். உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
தமிழக அரசு, அறநிலையத்துறை, காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? காவல் துறையினர் விசாரணை கைதிகளை அடிப்பதை முதலில் நிறுத்தி கொள்ள வேண்டும், வீட்டுமனை பட்டா, தம்பிக்கு வீடு கொடுப்பதால் போன உயிரை திரும்பி வருமா? புதிய சட்டம் இயற்றி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிக்கும் உரிமையை பறிக்க வேண்டும், தனிப்படையை கலைத்திருந்தாலும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.
பின்பு விஜய் குறித்த கேள்விக்கு, “விஜய் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கட்சித் தலைவர்கள் அனைவரும் அடுத்த தேர்தலையும் அடுத்த வெற்றியைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் 95 சதவிகிதம் டாஸ்மாக், போதை பொருள் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனை திசைதிருப்ப இரண்டு அப்பாவி நடிகர்களை பலி கடா ஆக்கியுள்ளனர். தேமுதிகவின் சார்பில் ஜனவரி 9 கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும்” என்று உறுதிபட தெரிவித்தார்.