இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டத்தை ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்தியுள்ளது. ‘ஆக்சியம் - 4’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட அமெரிக்கா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பகல் 12:01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டனர்.
இதையடுத்து சுபான்ஷு சுக்லாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன. ஆக்சியம் - 4 திட்டத்தின் விண்கலத்தை கேப்டன் சுபான்ஷு சுக்லா இயக்கிய நிலையில், கடந்த ஜூன் 26ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையில் வெற்றிகரமாக விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தன்னுடைய அனுபவம் குறித்து சுபான்ஷு சுக்லா தொடர்ந்து பேசியிருந்தார்.
18 நாட்கள் 7 மணி நேரம் 26 நிமிடங்கள் என சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு இந்திய நேரப்படி நேற்று (14.07.2025) மாலை 04:45 அணிக்கு புறப்படுவதாக இருந்த நிலையில் திட்டமிட்ட நேரத்தை விட 10 நிமிடங்கள் தாமதமாக டிராகன் புறப்பட்டு பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது. சுமார் 22 மணி நேரம் பயணம் மேற்கொண்டு இன்று (15.07.2025) மாலை பூமியின் வளிமண்டல எல்லைக்குள் புகுந்த ட்ராகன் விண்கலம் தற்போது கடல் பரப்பில் தரையிறங்கியுள்ளது. பூமியை வந்தடைந்த வீரர்களை மீட்கும் பணியை குழுவினர் தொடங்கியுள்ளனர்.