நாடாளுமன்றத்தில் அரசுத் துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்முதல் பற்றிய கேள்விகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகம் கொடுத்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“அரசு கொள்முதலில் 4 சதவீதம் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர் நிறுவனங்களிடம் இருந்தும், 3 சதவீதம் பெண்கள் தலைமை தாங்கும் நிறுவனங்களிடம் இருந்தும் செய்யப்பட வேண்டுமென்று பொதுத் துறை நிறுவனத் துறையின் வழிகாட்டல்கள் உள்ளன. இதற்கு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரண்டாலேஜ் அளித்த பதில் அதிர்ச்சியை தருகிறது.
2023 - 24 இல் செய்யப்பட்டுள்ள மொத்த அரசு கொள்முதல் ரூ 1,70,985 கோடிகள். இதில் எஸ்.சி எஸ்.டி தொழில் முனைவோர் இடமிருந்து செய்யப்பட்டுள்ள கொள்முதல் ரூ 1762 கோடிகள் மட்டுமே. 1.03 சத்வீதமே. பெண் தொழில் முனைவோரைக் கொண்ட நிறுவனங்களில் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ 3155 கோடிகள். இது 1.85 சதவீதம் மட்டுமே. 2024 - 25 ஆகஸ்ட் 5, 2025 வரை செய்யப்பட்டுள்ள மொத்த அரசு கொள்முதல் ரூ 2,69,860 கோடிகள். இதில் எஸ்.சி எஸ்.டி தொழில் முனைவோர் இடமிருந்து செய்யப்பட்டுள்ள கொள்முதல் ரூ 3585 கோடிகள் மட்டுமே. 1.33 சத்வீதமே. பெண் தொழில் முனைவோரைக் கொண்ட நிறுவனங்களில் இருந்து செய்யப்பட்ட கொள்முதல் ரூ 5972 கோடிகள். இது 2.21 சதவீதம் மட்டுமே.
"இலக்குகள் விளம்பரப்படுத்தப்பட்டால் போதாது. அவற்றை எட்டுவதற்கான அரசியல் உறுதி அவசியம். இத்தகைய கொள்முதல் கொள்கை அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும் எஸ்.சி எஸ்.டி தொழில் முனைவோர் இடம் வாங்குவது 1.33 % எனில் இலக்கில் அரைக் கிணறு கூட தாண்டவில்லை என்று பொருள் ஆகிறது. பெண் தொழில் முனைவோரிடம் இருந்து செய்யப்படும் கொள்முதலும் இலக்கை எட்டவில்லை. மேலும் இலக்கு என்பதே கூட குறைந்த பட்ச உறுதிப்பாடு மட்டுமே. அதையே அரசாங்கத்தால் செய்ய முடியவில்லை என்பது சமூக நீதியிலும், பாலின சமத்துவத்திலும் அரசின் உறுதியற்ற தன்மையை அம்பலப்படுத்துவதாக உள்ளது" என சு.வெங்கடேசன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.