திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் (Kartavya Dwar ) என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. அதாவது கர்தவ்ய த்வார் என்பதற்குத் தமிழில் கடமையின் நுழைவுவாயில் என்று பொருள்படும். இத்தகைய சூழலில் தான் புதிய நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தி மொழியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் வைத்துள்ளது தெற்கு ரயில்வே. கர்தவ்ய த்வார் என்றால் தமிழில் கடமையின் நுழைவுவாயில் என்று பொருள். பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தித் திணிப்பு மட்டுமே.
தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்தியில் உள்ள பெயரை நீக்கிவிட்டு, தமிழ் மொழியில் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. முன்னதாக தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஏற்கனவே பல போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், திருச்சியில் இந்திப் பெயரில் நுழைவு வாயில் திறக்கப்பட்டிருப்பது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
Follow Us