Su. Venkatesan MP says Suspended for speaking out against the BJP government
நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது 2026-2027 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் (01-02-26) தேதி தாக்கல் செய்தார். இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (02-02-26) முதல் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றது.
இந்த விவாதத்தில் நேற்று மக்களவையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சீனா ஊடுருவல் விவகாரம் குறித்து பேச முயன்றார். அப்போது ஒன்றிய பா.ஜ.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பேச மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்திக்கு மறுப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இன்று மக்களவை கூடியதும் சீன ஊடுருவல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார். அதற்கு பா.ஜ.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று மீண்டும் மீண்டும் அவை ஒத்தி வைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, மக்களவை கூடியதும் ராகுல்காந்தி இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு தயாரானார். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவையை நடத்தி வரும் அவைத் தலைவர் விஷ்ணு பிரசாத், ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதிக்காமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களை பேசுவதற்கு அழைப்பு விடுத்தார். இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்.பிக்கள் அங்கிருந்த மேஜைகள் மீது ஏறி ஆவணங்களைக் கிழித்து அவை தலைவர் மீது எறிந்தனர். இதனால் அமளியில் ஈடுபட்ட மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அந்த போராட்டத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து சு.வெங்கடேசன் எம்.பி, “மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. ஜனநாயகத்தின் உயிர்நாடியான விவாதமரபை முற்றிலும் சீர்குலைத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக நான் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். தேசபாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
Follow Us