Students struggling to obtain OBC certificate for Revenue Department struggle
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 ந் தேதி கடைசி நாள். ஆனால் தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறையினர் போராட்டத்தால் பல ஆயிரம் மாணவர்களுக்கு வருமானச் சான்று, ஓபிசி சான்று கிடைக்காமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த மாத இறுதியில் வருவாய் துறையில் பணியில் உள்ள அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறையினர் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வருவாய் துறைச் சார்ந்த மக்கள் சேவைகள் முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த நிலையில் தான் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 ந் தேதி கடைசி நாள். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்களில் ஓபிசி சான்று மிக முக்கியமாக உள்ளது. ஆகவே ஓபிசி சான்று பெறுவதற்காக இணைய வழியில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இந்த சான்று வழங்க வேண்டிய வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் இருப்பதால் ஓபிசி உள்ளிட்ட எந்த சான்றுகளும் கையெழுத்து போடப்படாமல் நிலுவையிலேயே உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்தில் சில பெற்றோர்கள் கூறும் போது, நீட் தேர்வு எழுதி மருத்துவர் கனவில் உள்ள எங்கள் குழந்தைகள் தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படித்து வருகின்றனர். ஆனால் தற்போது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 கடைசி நாள். அதற்கு விண்ணப்பிக்க ஓபிசி சான்று அவசியம் தேவை. ஓபிசிக்கு விண்ணப்பிக்க வருமானச் சான்று தேவை, கடந்த 20 ந் தேதி வருவாய் துறை சான்றுக்காக இணையத்தில் விண்ணப்பித்து காத்திருக்கிறோம். வருவாய் துறை போராட்டத்தால் எங்களுக்கு சான்று கிடைக்கவில்லை. அதனால் காலத்தோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இன்னும் 3 நாள் தான் உள்ளது. கடைசி நேரங்களில் இணையத்தில் சர்வர் பிரச்சனை வேறு வந்துவிடும். ஆகவே உடனடியாக ஓபிசி சான்று கிடைக்க அரசு நடவடிக்கை எடுப்பதுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலத்தையும் நீடிப்பு செய்ய வேண்டும் என்றனர்.
வருவாய் துறை அதிகாரிகளோ, நாங்கள் போராட்டத்தில் இருக்கிறோம் என்கின்றனர். தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உடனே ஓபிசி உள்ளிட்ட சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Follow Us