Students holds rally, blockade against exam fee hike at Annamalai University
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் 4 மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கல்லூரியில் பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் என பல்வேறு கட்டணத்தை 60 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதை திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் உயர்த்திய அனைத்து கட்டணத்தையும் திரும்ப பெற வலியுறுத்தி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று (13-06-26) வருகை தந்தனர். இவர்கள் அனைவரும் இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சௌமியா தலைமையில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது, கடலூர் மாவட்ட தலைவர் பூபதி, மாவட்டச் செயலாளர்கள் மயிலாடுதுறை அபினேஷ், விழுப்புரம் ஜீவானந்தம், கள்ளக்குறிச்சி பிரகாஷ்காரத், மாநிலக்குழு உறுப்பினர்கள் சபரி, திவ்யா உள்ளிட்ட இந்திய மாணவர்கள் சங்க நிர்வாகிகளுடன் பல்கலைக்கழக வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலையில் ஒன்று கூடி அங்கிருந்து பேரணியாக பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு வந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/isuu-2026-02-13-18-51-14.jpg)
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவர்களை பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அறிவுடையநம்பி மதியம் 1 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பல்கலைக்கழக நிர்வாக அலுவலக கட்டிடத்தில் அனைத்து மாணவ மாணவிகளும் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியையும் பதாகைகளையும் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் கோரிக்கை கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4 மணி வரை மாணவர்களை அழைத்து சரியான பதில் கூறாததால் பல்கலைக்கழக பதிவாளர் அறையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
Follow Us