திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட லண்டன் மிஷன் ரோடு பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரது மகன் முகிலன் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகம் சார்பில் முகிலனின் தந்தையை அழைத்து உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து விடுதியில் இருக்கும் முகிலன் வீட்டிற்கு வர வாய்ப்பில்லை. அதே சமயம் எதற்குப் பள்ளிக்கு வராமல் இருக்கிறார் என அதிர்ந்த பெற்றோர் இது குறித்துத் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக மாயமான மாணவன் முகிலனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று (03.08.2025) காலை முகிலன் பயின்று வந்த பள்ளி வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பு வளையமிட்ட கிணற்றில் சடலமாக மிதப்பதைக் கண்டு அவரது பெற்றோருக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் பெற்றோர் அங்கு விரைந்து சென்று முகிலனின் சடலத்தை மீட்டனர்.
மர்மமான முறையில் இறந்த முகிலனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர்கள் புகார் கூறியுள்ளனர். இது குறித்து திருப்பத்து நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்புக்காக இரும்பு கம்பிகளால் மூடப்பட்ட கிணற்றுக்குள் பள்ளி மாணவன் முகிலன் சடலமாக மீட்கப்பட்டது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் உடலைப் பார்த்துப் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/03/tpr-child-2025-08-03-12-35-46.jpg)