போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து அவரை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் நடிகர் கிருஷ்ணா கடந்த 25.06.2025 அன்று 2 மணியளவில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜரானார். சுமார் 22 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அதோடு அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இருப்பினும் அவரது வீட்டில் எந்தவிதமான ஆவணங்களும், போதைப்பொருளும் சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் வாட்ஸ் அப் சாட் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நடிகர் கிருஷ்ணா ஒரு குறிப்பிட்ட ‘கோட் வேர்ட்’ மூலம் நண்பர்களுக்குள் பேசி கொண்டது தொடர்பான மெசேஜ்கள் அழிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதோடு சென்னையைச் சேர்ந்த கெவின் என்ற நபரிடம் வாட்ஸ் அப்பில் உரையாடல் செய்ததாகவும், அதில் சில கோட் வேர்டுகளை பயன்படுத்திப் பேசியதாகவும் கூறப்பட்டது.
அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வாட்ஸ் அப் உரையாடல்களைக் கிருஷ்ணா அழித்திருக்கிறார். அவற்றை மீண்டும் மீட்டெடுத்து போலீசார் சோதனை செய்ததில் நடிகர் கிருஷ்ணா தொடர்ச்சியாக கெவின் என்ற நபரிடம் போதைப்பொருளை வாங்கியதை காவல்துறையினர் உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் கிருஷ்ணா மற்றும் கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் தயாளன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை மாதம் 10ஆம் தேதி (10.07.2025) வரை சிறையில் அடைக்க நடுவர் தயாளன் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் வலுவாக சிக்கிய ஆவணமாக கிருஷ்ணாவின் மொபைல் போன் அமைத்துள்ளது. காரணம், கிருஷ்ணாவின் மொபைல் போனில் நடத்தப்பட்ட ஆய்வில் வாட்சப் குரூப் ஒன்றில் தன்னுடைய நண்பர்களை இணைத்து அதில் போதைப் பொருளை பயன்படுத்துவது குறித்த பல்வேறு செய்தி பரிமாற்றங்கள் செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக எந்த இடத்தில்? எந்த நேரத்தில் போதைப் பார்ட்டி நடக்கும் உள்ளிட்ட தகவல்கள் அந்த வாட்ஸ் அப் குழுவில் பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வாட்ஸ் அப் குழுவில் கிருஷ்ணாவின் கல்லூரி நண்பர்கள் மற்றும் திரை துறையை சேர்ந்தவர்கள் என பலர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதேபோல இதில் சிக்கியுள்ள கெவின் என்ற நபர் இன்னும் எத்தனை பேருக்கு இதுபோன்று போதைப் பொருட்களை சப்ளை செய்துள்ளார் என்பது குறித்தும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது காவல்துறை.