பழனியில் மூன்று வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
பழனி கோட்டைமேட்டு தெருவைச் சேர்ந்த சதாம் உசேனின் மூன்று வயது மகன் முகமது ரியான், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு நாய்கள் தாக்கியதில் படுகாயமடைந்தான். சிறுவனின் முகம் மற்றும் காது பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வடிந்தது. அவனது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நாய்களை விரட்டி, சிறுவனைக் காப்பாற்றினர்.
உடனடியாக சிறுவனை பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். பழனி பகுதியில் தெரு நாய்கள் அடிக்கடி பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்டி கடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.