சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் கடந்த 23ஆம் தேதி (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

Advertisment

அதே சமயம் அவர் அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்தது. இதனால், நேற்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து  இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், “வீர வணக்கம்....  வீர வணக்கம்.... தகைசால் தமிழருக்கு வீர வணக்கம்... போராளிக்கு வீர வணக்கம்.... வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம், செவ்வணக்கம்.... வாழ்நாள் போராளிக்கு செவ்வணக்கம்” எனக் கூறி  இறுதி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரிக்கு உடல் ஒப்படைக்கப்பட உள்ளது.