தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் அரசியல் தலைவர்களின் பெயர்களில் இயங்கி வரும் விடுதிகள் இனி 'சமூக நீதி விடுதிகள்' என அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தமிழ் சமுதாயத்தை சமத்துவ சமுதாயமாக கட்டமைத்திட இந்த முயற்சி அடித்தளம் அமைக்கும். சமூக நீதி, சமநீதி, சட்ட நீதி ஆகியவை அனைவருக்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிடம் மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும்' எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'சமூகநீதியை படுகொலை செய்து விட்டு விடுதிகளுக்கு  பெயர் சூட்டுகிறார் ஸ்டாலின்  என்னவொரு முரண்?' என தெரிவித்துள்ளார் பாமகவின் அன்புமணி ராமதாஸ்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில்  பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும்  இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக அரசு பயன்படுத்துவதை விட  பெரிய கொடுமையும்,  முரண்பாடும் இருக்க முடியாது.

வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி  என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட  அவருக்கு தெரியவில்லை.

Advertisment

திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.  இந்தியாவில் கர்நாடகம், பிகார், தெலுங்கானம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில்,  தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை  தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1,193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.  அதேபோல் சமூக நீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது  திமுக அரசு.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்... சமூக நீதி என்பது மிகவும் புனிதமான சொல்... அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்' என தெரிவித்துள்ளார்.