திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள், முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்ட நிலையில் விழாவிற்காக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, ஆம்பூர் திமுக எம்எல்ஏ வில்வநாதன் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது அரசு நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் திமுக ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் மேடையில் அமர்ந்தும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நீண்ட நேரமாக கீழே நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

Advertisment

இதற்கிடையில், மேடையில் இருந்து கீழே இறங்கிய எம்எல்ஏவிடம் இலங்கை தமிழர் மறுவாழ்வு பெண் எழிலரசி என்பவர், தனக்கு ஒரு குழந்தை மற்றும் எந்த வேலையும் செய்ய முடியாத கணவர் உள்ள நிலையில் அதிகாரிகள் தனக்கு வீடு வழங்குவதற்காக பதிவு செய்யாமல் 2 ஆண்டுகளாக வீடு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை அரசின் திட்டங்கள் எதுவுமே கிடைக்கவில்லை எனவும், பல  முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அழுது புலம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அதை தொடர்ந்து, அங்குள்ள பழைய வீடுகளை அப்புறப்படுத்தி தங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறி எம்.எல்.ஏ காரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர். அரசு விழாவை, கட்சி விழா போல் நடத்திய இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இந்த சம்பவத்தால் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது