தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த கடலோர பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்திய எல்லையான கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் ஒரு நாட்டுப்படகு, 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த 35 மீனவர்களையும் எல்லைத் தாண்டி பிடித்ததாகக் கூறி சிறைபிடித்துள்ளனர். அவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/03/arrest-2025-11-03-08-14-47.jpg)
அதே சமயம் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 35 மீனவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து உரிய விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் சிறை பிடிக்கப்பட்ட 35 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்படைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின்னர் தான் இவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. மீனவர்கள் 35 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு புறம் மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்த நடவடிக்கை எடுத்துச் சிறைபிடிக்கப்பட்ட 35 மீனவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யாமல் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை என்பது மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Follow Us