தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (04-08-25) ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக ஒரு விசைப்படகுடன் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர், 4 மீனவர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்கள் வந்த விசைப்படகையும் சிறைப் பிடித்துச் சென்றனர். நாளுக்கு நாள் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் நிலையில், மீண்டும் மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவில், ‘இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணப் பிரதமர் மோடி நேரடி கவனத்தைச் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.