தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி (10.08.2025) மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரைச் சுற்றிவளைத்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப் படகுடன் கைது செய்தனர். அதன் பின்னர் மீனவர்கள் 10 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களுக்கு தலா ஒரு கோடியே ௪௬ லட்சம் ரூபாயை அபராதமாக இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது. அதோடு இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 18 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மிகவும் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.