Special revision of the voter list starts from today in tamilnadu
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இந்த திருத்த நடவடிக்கையை தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வாக்காளார் தீவிர திருத்தம் செய்வது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதனை அனுமதிக்க முடியாது என்றும் திமுகவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று (04-11-25) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடங்குறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று முதல் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்குகின்றனர். அதற்கான படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். இந்த நடவடிக்கை டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெற்று பிப்ரவரி 7ஆம் தேதியன்று வரைவு வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வெளியிடவுள்ளனர்.
Follow Us